×

ஓசூரில் ஒரே குடும்பத்தில் 4 பேரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது

ஓசூர், ஏப்.14: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கவுரம்மா. இவரது மகன் ராஜ்குமார் (29). குடி போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து, சக்திவேல் மீது மோதினார். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், அவரது சகோதரர்கள் மதன் (24), சக்கரவர்த்தி (26) மற்றும் தாயார் கவுரம்மா உள்ளிட்டோர், சக்திவேல், அவரது மனைவி ரூபா, மற்றும் சக்திவேலின் தந்தை மணி (60), தாய் சாந்தம்மா (55) ஆகியோரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் ரூபா, சாந்தம்மா, மணி, சக்திவேல் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக ரூபா அளித்த புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி, கவுரம்மா, மாதன், ராஜ்குமார், சக்கரவர்த்தி ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் தலைமறைவானார்கள். போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று மதியம் ஓசூர் பகுதியில் மறைந்திருந்த மாதன், ராஜ்குமார், சக்கரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கவுரம்மாவை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : Hosur ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்