×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றும் போலீசார்

காஞ்சிபுரம், ஏப்.8: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு, 3 ஷிப்ட் அடிப்படையில் போலீசார் பணியாற்றுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், சோழிங்கல்நல்லூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நேற்று முன்தினம் மேற்கண்ட தொகுதகிளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில், செங்கல்பட்டு 63.5%, திருப்போரூர் 76.74%, செய்யூர் 78.16%, மதுராந்தகம் 80.01%, சோழிங்கல்நல்லூர் 57.86%, பல்லாவரம் 60.8%, தாம்பரம் 59.3%. சராசரி 65.08 என சராசரியாக 62.77 சதவீத வாக்குகள் பதிவானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூா் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆசான் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இங்கு எஸ்பி சுந்தரவதனன் தலைமையில், 6 கண்காணிப்பு கோபுரம் அமைத்து, 3 டிஎஸ்பி, 9 இன்ஸ்பெக்டர்களுடன் 3 ஷிப்ட் அடிப்படையில் சுழற்சி முறையில் 360 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் மதுராந்தகம், செய்யூர் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயங்நதிரங்கள் நெல்வாய் கூட்ரோட்டில் உள்ள ஏசிடி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு ஒரு டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர் கொண்ட போலீசார் 320 போலீசார், 3 ஷிப்ட். அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள், தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பரங்கிமலை துணை கமிஷனா் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட பகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஜான்லூயிஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆலந்தூர்-60.85%. ஸ்ரீபெரும்புதூர் 74.03%, காஞ்சிபுரம் 72.96%, உத்திரமேரூர் 80.09% என சராசரியாக 69.47% வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து அனைத்து வாக்கு சாவடிகளிலும் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்களை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை மையமான காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து 4 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான காஞ்சிபுரம் அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.  வாக்குப்பதிவு செய்யப்பட்ட ஈவிஎம் மற்றும் விவிபிஏடி இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று அதிகாலை அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் எஸ்பி சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் பூட்டி சீல் வைத்தனர். இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒரு தொகுதிக்கு 75 போலீசார் வீதம் 4 தொகுதிகளுக்கும் சேர்த்து சுமார் 300 போலீசார் மற்றும் அனைத்துக் கட்சி முகவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags : Sengalupatta, Kanchipura ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...