×

கிறிஸ்தவர்கள் நலனுக்கு பாடுபடுவேன் புதூர் பூமிநாதன் உறுதி

மதுரை, ஏப்.4: மதுரை தெற்கு தொகுதி திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் பூமிநாதன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தூய மரியன்னை ஆலய பகுதியில் நேற்று பிரசாரம் செய்து அவர் பேசும்போது, ‘‘கிறிஸ்தவர்கள் நலனுக்காகவும், அவர்களின் கல்வி, வாழ்க்கை தரம் உயர்த்துவதற்கென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தல் அறிக்கையில் நல்ல பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அவற்றை நடைமுறைப்படுத்த உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்’’ எனக் கூறி வாக்குகள் சேகரித்தார்.

தூய மரியன்னை ஆலயத்தின் முன்பு ஏராளமாக திரண்டிருந்த கிறிஸ்தவர்களுடன், அப்பகுதியின் பல்வேறு தெருக்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். முன்னதாக வேட்பாளர் புதூர் பூமிநாதனை அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தெற்குவாசல் பகுதியில் பிரசாரம் செய்து பேசிய வேட்பாளர் புதூர் பூமிநாதன், ‘‘தெற்கு வாசல் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்கள் அமைக்கும் பணி நடைபெறும். இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய பாடுபடுவேன்’’ எனறார்.பிரச்சாரத்தின் போது மதிமுக மாவட்ட துணை செயலாளர் சுருதி ரமேஷ், தெற்கு சட்டமன்ற திமுக தேர்தல் பொறுப்பாளர் மதிச்சியம் வேல்முருகன், திமுக பகுதி செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் சென்றனர்.

Tags : Puthur Bhuminathan ,Christians ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்