கூடலூர், ஏப்.2: பந்தலூர் பழைய நெல்லியாளம் பகுதியில் கடந்த 29ம் தேதி இரவு அதிமுக, திமுகவினர் இடையே நடந்த வாக்குவாதத்தில் அதிமுகவை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் உதயச்சந்திரன் ஆகியோர் திமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன், ஆசைத்தம்பி, மனோகரன், மகேஷ் உள்ளிட்ட நான்கு பேரை அரிவாளால் வெட்டினர்.இதில், காயமடைந்தவர்களில் 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் காசிலிங்கம் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், ஒன்றிய செயலாளர் வியாகத் அலி, கூடலூர் நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.