கிருஷ்ணகிரி, மார்ச் 29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், கிறிஸ்வர்கள் திரளாக கலந்து கொண்டு ஓசன்னா பாடல் பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை பவனி, நேற்று பல்வேறு இடங்களில் நடைபெற்றது. குருத்தோலை ஞாயிறையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள புனித பாத்திமா அன்னை திருத்தலத்தில் இருந்து குருத்தோலை பவனி துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று புனித அன்னாள் பள்ளியை சென்றடைந்தது. இந்த பவனியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு, ஓசன்னா பாடல்களை பாடியவாறு பங்கேற்றனர். பின்னர், ஆலய பங்கு தந்தை இசையாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதேபோல், ஓசூர் மற்றும் சூளகிரி, பர்கூர், ஊத்தங்கரை, கந்திகுப்பம், எலத்தகிரி என மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதியிலும் உள்ள தேவாலயங்களிலும், குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடந்தது.