வாடிப்பட்டி, மார்ச் 26: சோழவந்தான் தொகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பால் அதிமுக வேட்பாளர் பிரசாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ மாணிக்கம் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுநீரேத்தான் கிராமத்தில் பிரசாரம் செய்ய சென்றார். அப்போது கிராமமக்கள் அவரை வழிமறித்து, ‘5 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு எந்த நலத்திட்டங்களும் செய்யவில்லை, இப்போது எதற்கு ஓட்டு கேட்டு வந்துள்ளீர்கள்’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அதிமுகவினர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி காக்க முயற்சித்தனர். ஆனால் கிராமமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணிக்கம் பிரசாரத்தை பாதியிலே நிறுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். பொதுமக்கள் எதிர்ப்பால் அதிமுக வேட்பாளர் பிரசாரத்தை பாதியில் நிறுத்தி சென்ற சம்பவம் சோழவந்தான் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.