சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று 140அ வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 மணி நேரம் நடந்தே சென்று மக்களிடம் வாக்குச் சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், வணிக பெருமக்கள், தொழிலாளர்கள், நலச்சங்க நிர்வாகிகள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்து, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘சைதாப்பேட்டை தொகுதிக்கு எனது சொந்த செலவில் சமூக சிந்தனையுடன் 10க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் பணியாற்றி வருகிறேன். மலேரியா, டெங்கு போன்ற காலக்கட்டங்களில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி, மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கி உள்ளேன். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, லாரிகளில் குடிநீர் வழங்கி உள்ளேன்.
மாணவர்களுக்கு கல்வி உதவி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தியுள்ளேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். அப்போது, திமுக பகுதி செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, சைதை மா.அன்பரசன், சி.பி.இறைவன், வட்ட செயலாளர்கள் ந.தமிழரசு, ரவி, சம்பத், சைதை அன்புதாசன், மு.மதி, காங்கிரஸ் செல்வகுமார், விசிக ஜேக்கப், மதிமுக சுப்பிரமணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.