சத்தியமங்கலம், மார்ச்20: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் இருந்த மர பாரம் ஏற்றிய லாரி மேட்டுப்பாளையம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக கொண்டு சென்று கொண்டிருந்தது.
26-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றதால் மற்ற வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை நகர்த்தும் பணி நடைபெற்றது. 2 மணி நேர போராட்டத்துக்கு லாரி நகர்த்தப்பட்டது. இதையடுத்து நீண்ட வரிசையில் நின்றிருந்த வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.