×

ஈரோடு வில்லரசம்பட்டியில் திமுக வேட்பாளர் முத்துசாமி வாக்கு சேகரிப்பு

ஈரோடு,மார்ச்19: ஈரோடு வில்லரசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லரசம்பட்டி, நால்ரோடு, செம்மாம்பாளையம், கருவில்பாறைவலசு, ஒண்டிக்காரன்புதூர், மாருதிநகர், ரோஜா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் முத்துசாமி நேற்று மாலை பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் முத்துசாமி பேசியதாவது, வில்லரசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்த போதிலும் அடிப்படை வசதிகள் என்பது மிகவும் குறைவாக உள்ளது. அடிப்படை தேவைகள், குறைகள் குறித்து ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளீர்கள். அந்த மனுக்கள் மீது திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களில் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஏனெனில் எதையெல்லாம் நிறைவேற்ற சாத்தியம் உள்ளதோ அதை மட்டுமே தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான கல்வி கடன், கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஈரோட்டில் அரசு சட்ட கல்லூரி, அரசு வேளாண்மை கல்லூரி, உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும். ஈரோட்டில் இந்திய ஜவுளி தொழில் நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவார்கள். எனவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு முத்துசாமி பேசினார்.

Tags : DMK ,Muthusamy ,Villarasampatti, Erode ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி