பெருந்துறை. மார்ச் 17: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஈரோடு மாவட்டத்தில் தனது பிரசார சுற்றுப் பயணத்தை விரைவில் மேற்கொள்ள உள்ளார். அதற்கான இடம் பெருந்துறை அருகே கடப்பமடை பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதே இடத்தில் ஈரோடு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை முதல்வர் அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அமைச்சர்கள் பொதுக்கூட்ட இடத்தை ஆய்வு செய்ய வந்தபோது பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஜேகே என்கின்ற ஜெயக்குமார், பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் பெரியசாமி, கவுன்சிலர்கள் சண்முகப்பிரியா, ஹேமலதா, சிஎம்எஸ் வங்கியின் துணை தலைவர் ஜெகதீஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் 2வது முறையாக மீண்டும் பிரசாரத்திற்கு பெருந்துறை வருவதால் அதிமுக வேட்பாளரான ஜேகே என்கிற ஜெயக்குமார் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார்.