×

மதுரை காமராஜர் பல்கலை.யில் சமூக அறிவியல் துறை கட்டிடத்தின் அம்பேத்கர் பெயர் திடீர் நீக்கம் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி

திருப்பரங்குன்றம், மார்ச் 17: மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தினுள் சமூக அறிவியல் துறை உள்ளது. பல்கலைக்கழகம் தோற்றுவித்த காலத்தில் இருந்து இந்த துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் ஆங்கிலம், வெளிநாட்டு மொழியியல் துறையும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்க்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மாளிகை என கட்டிடத்தின் மேல் பகுதியில் பெயர் பலகை பொறிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக தர மதிப்பீட்டு குழுவினர் பல்கலைக்கழகம் வந்தனர். அப்போது பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த அனைத்து கட்டிடங்களும் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. கட்டிடங்களில் உள்ள மராமத்து வேலைகள் சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த கட்டிடத்தின் மேல் உள்ள அம்பேத்கர்  பெயர் பொறிக்கப்பட்ட எழுத்து நீக்கப்பட்டுள்ளது இது கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.  இதுகுறித்து மாணவர் அமைப்பினர் கூறுகையில், ‘இது மத்திய அரசின் திட்டமிட்ட சதி. இதற்கு மாநில அரசு, பல்கலைக்கழக நிர்வாகம் துணை போய் உள்ளது. எனவே உடனடியாக அம்பேத்கர் பெயர் மீண்டும் அந்த இடத்தில் நிறுவப்பட வேண்டும். மேலும் இதற்கு காரணமான அலுவலர்கள்,  ஊழியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

Tags : Ambedkar ,Department ,Madurai Kamaraj University ,
× RELATED தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை