×

கோபி தொகுதியில் போட்டி அமைச்சர் செங்கோட்டையனுக்கு ரூ.5.50 கோடி சொத்து அதிகரிப்பு

கோபி, மார்ச் 16:தமிழக  பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும், அதிமுகவில் மூத்த அமைச்சராகவும் உள்ள  கோபியை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் தற்போது 10வது முறையாக கோபி  தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கோபி தேர்தல் நடத்தும் அலுவலர்  பழனிதேவியிடம் நேற்று வழங்கினார். அப்போது அவரது சார்பில் 4 வேட்புமனுக்கள்  அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்பாளர் செங்கோட்டையன் கூறும்போது, தமிழகத்தில் 234  தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற உயிரை கொடுத்து உழைக்க தயாராக  உள்ளதாக கூறினர். அதிமுகவில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு மாற்றாக குள்ளம்பாளையத்தை சேர்ந்த அவரது உறவினர் செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ரூ.5.50 கோடி சொத்து அதிகரிப்பு: கடந்த தேர்தலின்போது, கே.ஏ. செங்கோட்டையன் பெயரில் ரூ.3 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பு சொத்தும், அவரது மனைவி பெயரில் ரூ.82 லட்சம் என மொத்தம் ரூ.4 கோடியே 36 லட்சம் மதிப்பில்  சொத்துகள் உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று வேட்பு மனுதாக்கலின்போது, கே.ஏ.செங்கோட்டையன், அவரது மனைவி ஈஸ்வரி, மகன் இ.எஸ்.கதிர் ஆகியோர் பெயரில் அசையும் சொத்துகளாக ரூ.5 கோடியே 68 லட்சத்து 46 ஆயிரத்து 17, அசையா சொத்துகளாக ரூ.4 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.9 கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 17 ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : minister ,Senkottaiyan ,Kopi constituency ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...