புதுடெல்லி:பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் பயணிகள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் கழகம் (DMRC) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக DMRC தனது ‘X’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இந்த முக்கிய நிலையங்களில் பயணிகள் இயக்கம் முழுமையாகத் தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், புளூ லைன் பாதையில் உள்ள ஜண்டேவாலான் மெட்ரோ நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையிலும், காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) பேரணிப் போராட்டத்தினாலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஜாந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள 16 மெட்ரோ நிலையங்களை DMRC தற்காலிகமாக மூடியிருந்தது.
ராஜீவ் சவுக், படேல் சவுக், ஜனபத், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், ஐ.டி.ஓ, கான் மார்க்கெட் உள்ளிட்ட 16 நிலையங்கள் மூடப்பட்ட போதிலும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகிய நிலையங்களில் பயணிகள் ரயில்களை மாறும் (Interchange) வசதி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
