திட்டக்குடி, மார்ச் 13: திட்டக்குடியை அடுத்துள்ள ஆவட்டி கிராமத்தில் காட்டு ஆகாய கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பிச்சைபிள்ளை(50) என்பவர், தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்த்து வருகிறார். கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பிச்சைபிள்ளை நீண்ட நேரமாக தூங்குவதை பார்த்து அவரை எழுப்புவதற்காக அருகில் சென்று உள்ளனர். அப்போது தலையில் பலத்த வெட்டு காயத்துடன் கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பிச்சைபிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிச்சைபிள்ளை எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து ஆவட்டி மெயின்ரோடு வரை ஓடி நின்றது. கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து ராமநத்தம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.