குன்னூர், மார்ச் 12: குன்னூர் இயற்கை எழில் கொஞ்சும் காட்டேரி பூங்காவில் வரும் ஏப்ரல், மே மாத கோடை சீசனுக்காக 1.70 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்டேரி பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாத கோடை சீசனுக்காக மலர் நாற்றுககள் நடவு பணிகள் மார்ச் மாதத்தில் துவங்கும். அதன்படி. இந்தாண்டு கோடை சீசனுக்கு 1.70 லட்சம் மலர் நாற்றுகள் நடவுப்பணி துவங்கியது. ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட விதைகளில் இருந்து நாற்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், சால்வியா, மேரிகோல்டு, ஆஸ்டர், பிளாக்ஸ், டயான்தஸ், சூரிய காந்தி உள்ளிட்ட 30 வகைகள் நடவு செய்யப்பட உள்ளன. ஏப்ரல், மே மாதங்களில் பூக்கள் பூத்து சுற்றுலா பயணிகளை கவர தோட்டக்கலை துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.