×

ஊட்டி அருகே தேயிலை பூங்காவை பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டி அருகே தேயிலை பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். நீலகிரியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா என பல்வேறு பூங்காக்கள் உள்ளன. தேயிலையை பிரபலப்படுத்தும் வகையில் ஊட்டி-கோத்தகிரி சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் தொட்டபெட்டா அருகே 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை பண்ணையில் கடந்த 2015ம் ஆண்டு தேயிலை பூங்கா அமைக்கப்பட்டது.

இங்கு சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களின் நடுவே நடைபயணம் செய்ய வசதியாக நடைபாதை, பூங்காவை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் காட்சி கோபுரங்கள், குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள் கொண்ட சிறு பூங்கா உள்ளது. தேயிலை தூள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் மாதிரிகளும் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இங்கு குடிநீர் வசதி, கழிப்பறை, பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், தேயிலை பூங்காவிலும் உள்ள பாத்திகளில் பல்வேறு ரகங்களில் பல வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே சமவெளி பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள், ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவது மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இதனால் தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் காணப்படுகிறது. இதேபோல் கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள தேயிலை பூங்காவிலும் கூட்டம் காணப்படுகிறது. அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி பொழுது போக்குவதுடன் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

The post ஊட்டி அருகே தேயிலை பூங்காவை பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Botanical Garden ,Arboretum ,Rose Park ,Sims Park ,Vampire Park ,Dinakaran ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...