குடியாத்தம், மார்ச் 9: குடியாத்தத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பட்டதாரி பெண் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லதா(23), பிசிஏ பட்டதாரி. சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு குடியாத்தத்தில் வசித்து வந்தனர். தகவலறிந்த லதாவின் பெற்றோர் நேற்று முன்தினம் குடியாத்தம் வந்து லதாவை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் அவர், பெற்றோருடன் செல்ல மறுத்தார்.
இதையடுத்து காதல் தம்பதி நேற்று முன்தினம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி குடியாத்தம் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, லதா தனது காதல் கணவர் மணிகண்டனுடன் செல்வதாக தெரிவித்தார். திருமணம் செய்து கொண்ட லதாவும், மணிகண்டனும் மேஜர் என்பதால் மணிகண்டனுடன் லதாவை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக இருவீட்டாரும் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.