கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை தெலுங்கு காலனி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றிற்குள் நேற்று இரவு திடீரென வடமாநில வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை பார்த்து வீட்டின் உரிமையாளர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வடமாநில வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்த கவரைப்பேட்டை போலீசார், வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபரால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற 4 நாட்களிலேயே மீண்டும் வடமாநில வாலிபர் நுழைந்ததால் பொதுமக்கள், பெண்கள் அச்சத்திற்குள்ளாகினர். பொது மக்கள் தாக்கியதில் படுகாயத்துடன் இருந்த வடமாநில வாலிபரை
பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தாரா? அல்லது திருடும் நோக்கத்தில் நுழைந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில வாலிபர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
