கவுகாத்தி: சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவர்கள் எவருக்கும் ஆதார் அட்டை கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை வழங்குவது நிறுத்தபட்டுள்ளது என்று அசாம் முதல்வர் கூறினார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில்,‘‘சட்டவிரோத குடியேறிகள் ஆதார் அட்டையைப் பெறுவதைத் தடுக்கும் வகையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை வழங்கப்படாது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், ஆதார் அட்டையை வழங்குவதற்கான அனுமதியைக் கோரி மாவட்ட துணை ஆணையர் மாநில அரசுக்கு ஒரு முன்மொழிவை அனுப்ப வேண்டும். மாநிலத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணி நிறைவு நிலையை எட்டியுள்ளது. சில மாவட்டங்களில் இது 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. கூடுதல் ஆதார் அட்டைகளைப் பெறுபவர்கள் யார் என்பதை நாம் கண்டறிய வேண்டும்,’’ என்றார்.
