ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 6: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்தார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவித்தான் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு வேலை பார்க்கும் கருப்பசாமி(52) என்பவர், நேற்று பட்டாசு கழிவுகளை ஆலைக்கு வெளியே வைத்து எடை போட்டார். அப்போது மருந்து உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இதில் கருப்பசாமி படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட சக ஊழியர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 90 சதவீத காயத்துடன் கருப்பசாமி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே சம்பவ இடத்தில் சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம், தாசில்தார் அருளானந்தம் ஆகியோர் ஆய்வு நடத்தினர். பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
