திருமலை: தெலங்கானா மாநிலத்தில் பணம் செலுத்தி சிறைக்கு சென்று அதன் அனுபவத்தை உணரும் திட்டத்தை கவர்னர் தொடங்கி வைத்தார். தெலங்கானா மாநில சிறைத்துறையால் தொடங்கப்பட்ட ‘சிறையை உணருங்கள்’ திட்டத்தின் ஒரு பகுதியாக சஞ்சல்குடா மத்திய சிறையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 செலுத்துவதன் மூலம், ஒரு கைதியை போல 24 மணி நேரம் சிறையில் கழிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், கைதிகளை போலவே அவர்களும் அதே உணவு, சீருடை, விதிகள் மற்றும் வாழ்க்கை முறையை அனுபவிக்க வேண்டும். இருப்பினும் இடையில் வெளியே வர விரும்பினால், அவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தி வெளியே வர வேண்டும். இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
ஐதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா சிறையில் நேற்று நடைபெற்ற அருங்காட்சியகம் மற்றும் சிறையை உணருங்கள் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கவர்னர் சிவபிரதாப் சுக்லா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘திறந்தவெளி சிறை கொள்கை நல்ல பலன்களை தரும். நான் உத்தரபிரதேச அமைச்சராக இருந்தபோதும், சில சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தேன். அதில் சிறைக்கு வரும் கைதிகளிடம், சிறை அதிகாரிகள், அவர்களிடம் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். கைதிகளை முழுமையாக அடைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு இனிமையான சூழல் நிலவும்போது, மட்டுமே அவர்களிடையே மாற்றத்தை கொண்டுவர முடியும்’ என்றார்.
