திருவனந்தபுரம்: தென்காசியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆலப்புழா அருகே உள்ள எடத்துவா சர்ச்சுக்கு சென்றிருந்தனர். அங்கு பிரார்த்தனையை முடித்த பின்னர் நேற்று முன்தினம் இரவு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு புறப்பட்டனர். இவர்கள் பொதுப்பெட்டியில் பயணம் செய்தனர். இந்தக் குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி தன்னுடைய தாத்தாவுடன் தூங்கிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் அந்தப் பெட்டிக்கு வந்த ஒரு ஆசாமி சிறுமியை நைசாக தூக்கி அடுத்த பெட்டிக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளான்.
அதைப் பார்த்த அந்தப் பெட்டியில் இருந்த ஒரு இளம்பெண் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே இந்த ரயில் புனலூர் ரயில் நிலையத்தை அடைந்தது. புனலூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த கொல்லத்தைச் சேர்ந்த சானிஷ் (46) என்பவரை கைது செய்து விசாரித்தனர். பின் போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
