×

தமிழ்நாட்டில் பாசிச பாஜகவையும், அடிமை அதிமுகவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்: திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

திருப்பூர்: திருப்பூர் பாண்டியன் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, திருப்பூர் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் 8 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். “என்கிட்ட மோதாதே… இது பெரியாரின் தமிழ்நாடடா என பாடல் பாடி திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர்; “இந்தியாவில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியோடு திருப்பூருக்கு வந்துள்ளேன். நாம் பறக்க விட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவி கொடியை வீழ்த்தியுள்ளது. தொகுதி மறுவரையறையின் ஆபத்து ஓராண்டுக்கு முன்பே நான் எடுத்துரைத்தேன். நாமக்கல்லில் பற்ற வைத்த தீ நாடு முழுவதும் பரவியுள்ளது.

ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் திருப்பூர் தனது அடையாளத்தை இழந்து வருகிறது. சொந்த மாநிலத்துக்கும் மக்களுக்கும் எதிராக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. தாராபுரம் தொகுதிக்கு அரசு கல்லூரி, தந்தை பெரியார் நகர் அருகே உயர்மட்ட பாலம் அமைப்பு. பில்லூர் நீர்த்தேக்கத்தை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தாராபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி, தொழிலாளர்களுக்கு கேடு விளைவித்துவிட்டு எந்த முகத்துடன் மோடி வாக்கு கேட்கிறார்.

பணமதிப்பிழப்பு என்ற கறுப்பு தினத்தை இன்றைக்கும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியால் தொழில் நகரமான திருப்பூர் அதிகம் பாதிக்கப்பட்டது பாஜகவினால் மக்கள் அடைந்த வேதனைகள் அதிகம். பாஜக ஆட்சியாளர்கள் பொய் சொல்லி வாக்கு கேட்கிறார்கள்.

தோழி விடுதித் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் விடியல் பயணத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நீதியை படுகுழியில் தள்ளும் வேலையைத்தான் மற்ற மாநிலங்களில் பாஜக செய்து கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன. திராவிட மாடல் அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் செயல்படுத்துகின்றன. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தொடரவே திமுக தேர்தல் அறிக்கை எனும் சூப்பர் ஸ்டாரை களமிறக்கியுள்ளோம்.

சொல்வதற்கு கொள்கையும், சாதனைகளும் இல்லாத பழனிசாமி அவதூறு பரப்பி வருகிறார். தமிழ்நாட்டில் பாசிச பாஜகவையும், அடிமை அதிமுகவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும். மகளிருக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500, நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500 என உயர்வு. மக்களின் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் ‘OG'” என முதலமைச்சர் பேசினார்.

Tags : THIRUPPUR ,K. STALIN ,Tiruppur ,Tiruppur Pandian ,Chief Minister ,Assembly Constituency ,Dimuka Alliance ,Peryaar ,
× RELATED பாஜகவினால் மக்கள் அடைந்த வேதனைகள்...