சென்னை: உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றிப் பார்க்க தொல்லியல் துறை சார்பில் இன்று ஒரு நாள் இலவச அனுமதி வழங்கப்பட்டதால் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், புடைப்பு சிற்ப தொகுதிகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள், நரசிம்மவர்ம பல்லவனால் செதுக்கப்பட்டன. எட்டாம் நுாற்றாண்டின் படைப்புகளான இவை இன்றும் பிரமிக்கும் அழகுடன் உள்ளன.
இயல்பாகவும், நளினமாகவும், கலை நுணுக்கத்துடனும் படைக்கப்பட்ட இவற்றை, உலக பாரம்பரிய சின்னங்களாக, உலக கலாசார அமைப்பான யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார அலுவலகம், இவற்றை பழமை மாறாமல் பராமரித்து, பாதுகாத்து வருகிறது. சுற்றுலா பயணியரிடம், நுழைவுக்கட்டணமாக, இந்தியருக்கு தலா ரூ.40, சர்வதேச நாட்டினருக்கு தலா ரூ.600 என அத்துறை வசூலிக்கிறது. உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றிப் பார்க்க தொல்லியல் துறை சார்பில் இன்று ஒரு நாள் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
