திமுக எம்எல்ஏ நேரில் ஆய்வு
ராஜபாளையம், பிப். 23: சேத்தூர் பேரூராட்சி பகுதியில் நேற்று முன்தினம் நெல் கொள்முதல் நிலையம் அருகே இரவு பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள், ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதிக்கு எம்எல்ஏ தங்கபாண்டியன் நேரில் சென்று மழையால் நனைந்து முளைத்த நெற்களை பார்வையிட்டார். அப்போது, நாள் ஒன்றுக்கு 800 நெல் மூட்டைகளை மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. அதனை அதிகப்படுத்த புதிதாக நெற்களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக கலெக்டர் கண்ணனிடமும், நெல்கொள்முதல் நிலைய மேலாளர் ஆறுமுகத்திடம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நெல்லை அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அவர்களும் அதிகளவில் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்நிகழ்வில் நிலைய அலுவலர் கோபி, பேரூர் கழக துணை செயலாளர் வேலு, விவசாய சங்க செயலாளர் அம்மையப்பன், இளைஞர் அணி மகேஷ்வரபாண்டியன் கலந்து கொண்டனர்.