×

முத்து நகருக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்திருக்கிறேன்: தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

தூத்துக்குடி: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

பரப்புரையில் முதல்வர் கூறியதாவது:

முத்து நகருக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்திருக்கிறேன். மீன்வளமும், துறைமுகமும் வணிகமும் செழிக்கக் கூடிய தூத்துக்குடிக்கு வந்துள்ளேன். வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், நல்லகண்ணு உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை தந்த மாவட்டம் தூத்துக்குடி.  தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய் போல் மாவட்ட மக்களும் இனிமையானவர்கள். தமிழ்நாட்டுக்கு இனிப்பு மட்டுமல்ல, உப்பும் கொடுப்பவர்கள் தூத்துக்குடி மக்கள்.

வெள்ள பாதிப்பின் போது ஓடோடி வந்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டேன். வெள்ள நிவாரண நிதியாக ஒன்றிய பாஜக அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6000 வழங்கினோம். கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்துக்கு என்னைப் போல் யாரும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார்கள்.

தூத்துக்குடி என்று சொன்னால் 13 அப்பாவி மக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற ஆட்சியை மறக்க முடியுமா? துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்ததே தெரியாது என பேசியவர் எடப்பாடி பழனிசாமி. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டதாக வெட்கமே இல்லாமல் பழனிசாமி பேட்டி அளித்தார். பழனிசாமிக்கு தெரிந்தேதான் 13 அப்பாவிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஐஜி நிமிடத்துக்கு நிமிடம் என்ன நடக்கிறது என பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர் ஊராக போய் கண்டதையும் வாந்தி எடுத்துட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சாத்தான்குளம் கொலையையே மறைக்கப் பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. என் மீதும் தங்கை கனிமொழி மீதும் தனிநபர் தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒன்றிய பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக என்ன சாதனை செய்தது? மும்மொழி கொள்கை, தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என்று பழனிசாமியால் பாஜகவை சொல்ல வைக்க முடியுமா..? காலில் விழுந்தோமா? காலை வாரி விட்டோமா? அடுத்த காலை நோக்கி சென்றோமா என்பதுதான் பழனிசாமியின் வாழ்க்கை. ஒன்றிய அரசின் வஞ்சனைகளை எல்லாம் மீறி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். என்று கூறினார்.

Tags : Muthuvel Karunaniti Stalin ,Muthu Nagar ,Chief Minister ,Tuthukudi ,K. STALIN ,Thoothukudi ,Tamil Nadu Assembly elections ,President ,First Minister ,Tamil Nadu ,MLA ,Dimuka ,K. In ,Stalin ,
× RELATED முத்து நகருக்கு முத்துவேல் கருணாநிதி...