×

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு 326 மத்திய, சிறப்பு செலவின பார்வையாளர்களுடன் ஆலோசனை: தேர்தல் ஆணையம் நடத்தியது

சென்னை: தேர்தலை முன்னிட்டு, மத்திய பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு செலவினப் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை வழங்கியது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய பார்வையாளர்களுக்கான (பொது, காவல் மற்றும் செலவினப் பார்வையாளர்கள்) ஆய்வுக்கூட்டத்தை காணொலி வாயிலாக நேற்று நடத்தினர். வாக்காளர் வருகை பதிவேட்டில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை மற்றும் வாக்குப்பதிவு முடிவில் வாக்காளர் வருகை தரவை உடனுக்குடன் பதிவேற்றுதல், அழிக்க முடியாத மையினை சரியாக பயன்படுத்துதல், படிவம் 17-சி-ஐ நிரப்புதல் மற்றும் வாக்குப்பதிவு முடிவில் அங்கிருக்கும் முகவர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளுதல், மாதிரி வாக்குப்பதிவு தரவுகளை நீக்குதல் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். வெப்பமான வானிலை காரணமாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதுமான குடிநீர் வசதி மற்றும் நிழல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். இணையவழி ஒளிபரப்பு கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்பாடுகள் முறையாகச் சரிபார்க்கப்பட வேண்டும். அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள் பிழைகளைக் கண்டறிந்து தெரிவிக்க தகுந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அவர்களின் முன்னிலையில் மாதிரி ஓட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் இக் கூட்டத்தில் வழங்கப்பட்டன.

Tags : Election Commission ,Tamil Nadu Assembly ,Chennai ,Chief Election Commissioner ,Gyanesh Kumar ,Commissioners ,S.S.Sandhu ,Vivek Joshi ,
× RELATED மதுராவில் பெரும் சோகம்: யமுனை ஆற்றில்...