திருச்செங்கோடு, ஏப்.10: திருச்செங்கோட்டில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரிக் வாகனங்கள் அணிவகுத்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான முன்னெடுப்பினை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்செங்கோட்டில் ரிக் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மை வோட் நாட் பார் சேல் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, கல்லூரி மாணவர்களும், பெண்களும் கைகளில் பிடித்தபடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதையடுத்து, ரிக் வாகனங்கள் அணிவகுத்த பேரணி நடைபெற்றது. இப்பேரணியை நாமக்கல் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான துர்கா மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரிக் வாகனங்களில் என் வாக்கு -என் உரிமை என்ற பதாகைகளை கட்டி, திருச்செங்கோடு நகர் முழுவதும் பேரணியாக வந்தனர். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் லெனின், தாசில்தார் மதியழகன், டிஎஸ்பி கிருஷ்ணன், ரிக் சங்க தலைவர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
