×

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஐந்தாண்டுகால ஆட்சியில் தொழில் உற்பத்தி 82.6 சதவீத அசுர வளர்ச்சி: ஆர்.பி.ஐ வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தகவல்

 

தொழிற்சாலைகளில் பொருள்களை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை: 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்கள், மகளிர் ஆகியோரின் வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அந்தவகையில், தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில் தொடங்கிட ஊக்கமளிக்க தொடங்கினார். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி முதலிய பல்வேறு இடங்களில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் முதலிய நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தேவையான நில வசதிகள் உட்பட அனைத்தையும் தமிழக அரசு வழங்கும். அத்துடன், அறிவும் ஆற்றலும் நிறைந்த கல்வி, தொழில்நுட்பத்தில் சிறந்த மனிதவளமும் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன என்பதை எடுத்துக் கூறி தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடுமையான உழைப்பின் பயனாக, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் தொழில் முகவர்களுடன் 1176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 12.16 லட்சம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பெருகி 100க்கும் மேற்பட்ட புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. 36 லட்சம் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளின் உற்பத்திகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இந்திய ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் என ஒன்றிய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் ரிசர்வ் வங்கி 2024-2025ம் ஆண்டுக்கான தொழில் உற்பத்தி மதிப்பீடுகளை அண்மையில் வெளியிட்டு இந்தியாவின் தொழில் துறைத் தலைவனாகத் தமிழ்நாடு நிகழ்த்தியுள்ள ஒரு வரலாற்றுச் சாதனையைப் பறைசாற்றியுள்ளது.

இந்தியாவின் தொழில் வரைபடத்தில், 2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி மொத்த மதிப்பு ரூ. 9 லட்சத்து 65 ஆயிரத்து 3.78 கோடி, இதன்மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் தொழிற்சாலைகளில் ரூ. 5 லட்சத்து 28 ஆயிரத்து 581. 86 கோடி மதிப்புடைய பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் எதிலும் குஜராத் மாடல் என்று பெருமையடித்துக் கொள்ளும் குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலை உற்பத்தி மதிப்பு மிகமிகக் குறைவு என்பதால் இந்தப் புள்ளிவிவரங்களில் சுட்டிக்காட்டப்படவில்லை போலும் . ஆனால்.

* மகாராஷ்ட்டிர மாநிலத்தில் ரூ. 9,50,569.23 கோடி,
* உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ. 7,34,898.64 கோடி,
* ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ. 4,26,472.1 கோடி ,
* மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ. 3,19,839.03 கோடி

என பி.ஜே.பி ஆளுகின்ற மற்ற எல்லா மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி தொழிற்சாலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் என்னும் மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சாதனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முக்கிய காரணம் என்பது அதிகாரபூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது.

* திராவிட மாடல் ஆட்சியில் அசுர வேக வளர்ச்சி:
கடந்த 2019-20ம் ஆண்டில் ரு. 5.28 லட்சம் கோடியாக இருந்த தொழில்துறை உற்பத்தி மதிப்பு, இன்று இந்த உச்சத்தை எட்டியிருப்பது வெறும் எண்கள் அல்ல; இது தமிழகத்தின் அசுர வளர்ச்சியின் அடையாளம். இந்த குறுகிய காலத்தில் மாநிலம் எட்டியுள்ள 82.6 சதவீதம் வளர்ச்சி, தமிழகத்தின் வலுவான தொழில்துறை கட்டமைப்பு, தொலைநோக்குக் கொண்ட அரசு கொள்கைகள் மற்றும் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு கொண்டுள்ள மேலாதிக்கத்தைப் பறைசாற்றியுள்ளது

* நிலையான வளர்ச்சி – நீடிக்கும் பெருமை
மற்ற மாநிலங்கள் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழ்நாடு தனது சீரான மற்றும் நிலையான செயல்பாட்டின் மூலம் இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இது வெறும் பொருளாதார உயர்வு மட்டுமல்ல, உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி மையமாகத் தமிழ்நாடு மாறியிருப்பதன் நிதர்சனமான உண்மையாகும்.

Tags : M.U. K. ,Stalin ,Tamil Nadu ,Chennai ,Chief Minister ,
× RELATED மு.க.ஸ்டாலின், எடப்பாடி, சீமான், விஜய்...