டெல்லி: விமான எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து விமான கட்டணங்களை நாளை முதல் உயர்த்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கு ஆசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய கடல் வழி தடமான ஹார்மோஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக விமான எரிபொருள் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாக உள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டங்களை உயர்த்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி 500 கி.மீ. வரை 299 ரூபாயும், 1000 கி.மீ.வரை 399 ரூபாயும், 1500 கி.மீ. வரை 549 ரூபாயும், 2000 கி.மீ.வரை 749 ரூபாயும், 2000 கி.மீட்டருக்கு மேல் 899 ரூபாயும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு பொருந்தாது என்றும், ஆனால் பயண தேதியை மாற்றினால் கட்டண உயர்வு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
