சென்னை, ஏப்.6: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்று பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கூறினார். திருத்தணி முருகன் கோயிலில் நேற்று பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா குடும்பத்துடன் பங்கேற்று கல்யாண முருகர் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘விஜய் கட்சி தேர்தலில் போட்டியிடுவதால் திமுக, விசிகவுக்கு பாதிப்பு, அதிமுக-பாஜ கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றார். இதனால் பாஜ கூட்டணியில் உள்ள அதிமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் தான் தலைவர் என்றும், முதலமைச்சர் வேட்பாளர் என்றும் கூறி வரும் நிலையில், தேர்தலுக்கு பிறகு அரசியல் களத்தை மோடி முடிவு செய்வார் என்று எச்.ராஜா சர்ச்சை கருத்து கூறியது அதிமுக கூட்டணியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
