புழல், ஏப்.6: மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில் ரகுசேகர் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 59,500 ரூபாய் ரொக்கப் பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே நிலைக் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ரீது என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.17 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் மாதவரம் தொகுதியில் இருவேறு இடங்களில் நடந்த சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 1.77 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
