காரிமங்கலம், பிப்.19: காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்தில், திமுக வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கனிமொழி எம்பி பங்கேற்றார். காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மல்லுபட்டியில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி கலந்துகொண்டு பேசியதாவது: மத்திய பாஜக அரசு மீதும், மாநில அதிமுக அரசு மீதும் பொது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். வரும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும். பொதுமக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வாக்கு சாவடி முகவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.ஆளுங்கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முறைகேடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதை வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்கொண்டு முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ, முன்னாள் எம்பி வழக்கறிஞர் தாமரைச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா நாகராஜ்,மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சூடபட்டி சுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், அன்பழகன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் முருகன், விவசாய அணி அமைப்பாளர் ரவி, துணை அமைப்பாளர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.