வாஷிங்டன்: விமான எரிபொருள் விலை இரு மடங்குக்கு உயர்ந்து ஒரு கிலோ லிட்டர் ரூ.2.07 லட்சத்துக்கு விற்பனை செய்யபப்டுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தீவிரமான ராணுவ மோதலால், உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மூடியுள்ளது. இதுமட்டுமின்றி, கத்தாரில் உள்ள ரஸ் லாபன் எரிவாயு முனையம், சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலக சந்தைக்கு நாளொன்றுக்கு கிடைக்க வேண்டிய 80 லட்சம் முதல் 1 கோடியே 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த விநியோக தட்டுப்பாடானது உலக பொருளாதாரத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.96,638ல் இருந்து ரூ.2.07 லட்சமாக உயர்ந்தது. ஏற்கனவே கடந்த மாதம் 1ம் தேதி விமான எரிபொருள் விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது. எரிபொருள் விலை இரு மடங்குக்கு மேல் உயர்ந்ததால் விமான பயணக் கட்டணம் அதிகரிக்கக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
