மணாலி: இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற அடல் சுரங்கப்பாதை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பனியில் சிக்கிக்கொண்டன.
காலையில் மணாலியிலிருந்து லாஹால் பள்ளத்தாக்கு மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்ற வாகனங்கள், மாலை நேரத்தில் மணாலி திரும்ப முயன்றபோது அடல் சுரங்கப்பாதையின் தெற்குப் பகுதியில் சிக்கிக்கொண்டன.
சாலைகளில் அதிகப்படியான பனி படிந்ததால் வாகனங்கள் வழுக்கத் தொடங்கின. இதனால் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் மணாலி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகளை வேகப்படுத்த எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) மற்றும் பிற ஏஜென்சிகளின் உதவி கோரப்பட்டுள்ளது. சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதுடன், பனியை விரைவாக உருக்க மண் மற்றும் யூரியா உரம் தூவும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிக்கியுள்ள அனைத்து வாகனங்களையும் பாதுகாப்பாக மணாலி நோக்கி அனுப்பி வைக்கப் போலீசார் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அமைதி காக்குமாறும், மீட்புப் பணிகளுக்குப் காவல் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
