குன்னூர், மார்ச் 14: சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீரைத் தேடி காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. குன்னூர் மலைப்பாதையில் கடந்த ஒரு வாரமாக 2 குட்டிகள் உட்பட 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
நேற்று காலை இந்த 9 யானைகளும் குன்னூர் மலைப்பாதையில் உள்ள பர்லியார் போலீஸ் சோதனைச்சாவடிக்கு பின்புறம் தஞ்சமடைந்தன. அவ்வப்போது இந்த யானைகள் உணவிற்காக சாலையைக் கடந்து செல்வதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களும் அச்சமடைந்து வருகிறார்கள். யானைகள் சாலைக்கு வராமல் தடுப்பதற்காக வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
