குளச்சல், பிப். 11 : கம்மலை கழற்ற சொன்ன கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் மாணவர்கள உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே லட்சுமிபுரத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திக்கணங்கோடு புதூர் பகுதியை சேர்ந்த அனீஷ் என்பவர் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரியில் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி நடந்தது. அப்போது முதல்வர் (பொறுப்பு) ஜெயகுமார், மாணவர் அனீஷிடம், அவர் அணிந்திருந்த கம்மலை கழற்றுமாறு கூறியுள்ளார். இதற்கு அனீஷ் எதிர்ப்பு தெரிவித்ததோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவரான நபீசும் குரல் கொடுத்துள்ளார். தொடர்ந்து அனீஷ் போன் செய்து தனது நண்பர்களை அழைத்துள்ளார். இதையடுத்து நண்பர்கள் 10 பேர் 5 பைக்குகளில் கல்லூரி வளாகத்துக்குள் வந்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவர்களை வளாகத்தில் வைத்து கேட்டை இழுத்து மூடியது. இது குறித்து மண்டைக்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அனீஷ், நபீஸ் உள்பட 12 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கல்லூரி முதல்வருக்கு மாணவர்கள் மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.