திண்டுக்கல், பிப்.11: திண்டுக்கல் அருகே உள்ள என்எஸ்.நகர் அபிராமிநகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் கவுதம்(20). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக கல்லூரிகள் செயல்படாத நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பால் பாக்கெட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று வேலை முடிந்து தாடிக்கொம்புவில் இருந்து திண்டுக்கல்லுக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். மாவட்ட விளையாட்டு மைதானம் அடுத்து உள்ள செங்குளம் பிரிவு அருகே சென்ற போது அவருக்கு பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சரக்கு லாரியை ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த குணசேகரன்(44) என்பவரை வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.