×

கடுமையான உழைப்பைக் கொடுத்து, உலகிலேயே கடினமான UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரிய அரங்கில் அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. “நான் முதல்வன்” திட்டத்தில் படித்த 60 மாணவர்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் 56 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு பயிற்சி பெற டெல்லி செல்லும் நிலை இருந்தது. ஆனால், ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, டெல்லி சென்று படித்தவர்கள்கூட, தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். டெல்லியின் தனியார் பயிற்சி நிலையங்களைவிட, சிறந்த பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.” என்று பேசினார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கடுமையான உழைப்பைக் கொடுத்து, உலகிலேயே கடினமான UPSC தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். நீங்கள் படைத்திருப்பது சாதாரண சாதனை அல்ல. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றிபெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. அதனை உடனடியாக சரி செய்ய, நான் முதல்வன், ஊக்கத்தொகை, உயர் பயிற்சி, நேர்முகத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி என பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்தது.

தற்போது அதற்கான பலனைப் பெற்று வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் சுமார் 60 பேர் தமிழ்நாட்டிலிருந்து இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் கூட வேண்டும். உங்கள் கனவு நிறைவேறிவிட்டது; மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள். அதிகாரிகளாக பொறுப்பேற்றதும் சாமானிய மக்களிடம் அன்பாக இருங்கள். தமிழ்நாட்டில் இருந்து பல இளைஞர்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று எளிய மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நாடுகளுக்கு இடையிலான உறவையும் மேம்படுத்த வேண்டும்.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : UPSC ,Principal ,M.U. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Deputy ,Udayaniti Stalin ,All India Civic Award Ceremony ,Park Town Victoria Arena ,
× RELATED தமிழ்நாட்டை விட்டு கிளம்பிய ஆளுநர்...