×

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: 9.09 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்..!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 9.09 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இது ஏப்ரல் 6ம் தேதி வரையில் நடக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 12,467 பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

இதுதவிர, பத்தாம் வகுப்பில் 395 சிறைவாசிகளும் எழுத பதிவு செய்துள்ளனர். இந்த தேர்வில் பங்கேற்க உள்ள 12,292 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு வசதியாக, சொல்வதை எழுதும் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கு வரும் மாணவ, மாணவியருக்கு கேள்வித்தாள் வழங்கிய பிறகு, ஒவ்வொரு தேர்வு அறையிலும் மீதம் உள்ள கேள்வித்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளர்களே மாணவர்கள் முன்னிலையில் உறையிலிட்டு சீலிடும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தேர்வறை கண்காணிப்பாளர்கள் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 49,542 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க 4,800 பறக்கும் படையினரும், தேர்வு நடக்கும் வளாகத்துக்குள் ஆசிரியர்கள் உள்பட யாரும் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுகள் தொடர்பான புகார்கள் ஏதாவது இருந்தால், அதுகுறித்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் 9498383075 மற்றும் 9498383076 ஆகிய எண்களில் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Class 10 general election ,Tamil ,Nadu ,Chennai ,Puducherry, Tamil Nadu ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED ஈரான் போரால் கடும் தட்டுப்பாடு...