சென்னை: தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள். சினிமா மயக்கத்தில் தற்போதைய சூழலில் வாக்களிக்க வாய்ப்பு இல்லை என திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று மதியம் சென்னையில் இருந்து மதுரை சென்றார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் மாற்று கூட்டணி எதுவும் தமிழ்நாட்டில் இன்னும் உருவாகவில்லை.
விஜய் இரண்டாம் இடத்திற்கு வருவார் என்று கூறுவது ஜோதிமணியின் கருத்து. அது தேர்தலுக்குப் பின்பு தான் தெரியும். அவரால் தமிழ்நாட்டு அரசியல் தலைகீழாக மாறப் போகிறது என்று தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள். கடந்த காலங்களில், சினிமா மயக்கத்தில் வாக்களித்தது போல, தற்போதைய சூழலில் வாக்களிக்க வாய்ப்பு இல்லை. எனவே சினிமா மயக்கம் தமிழ்நாட்டை இனிமேல் பாதிக்காது.
பாஜ-அதிமுக கூட்டணியில் இன்னும் பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை.
கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டு என்பது இன்னும் முடிவு எடுக்கவில்லை. எனவேதான் அவர் திரும்ப திரும்ப வந்து செல்கிறார். அது வழக்கமானதுதான். அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஓபிஎஸ் கட்சியில் சேர்ந்து திமுகவாக ஆகிவிட்டார். எனவே அவர் கட்சி சார்பாக, தேர்தலில் போட்டியிடுவதற்கு, விருப்பம் மனு கொடுப்பதில் தவறு ஏதும் இல்லை. கட்சியில் எப்போது சேர்ந்தாலும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் விருப்பம் மனு கொடுத்து தான் ஆக வேண்டும். அதைத்தான் அவர் செய்கிறார். அதில் தவறு இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
