சென்னை: மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏழை பெண்கள், கிராமப்புற பெண்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரி தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும், பள்ளி மாணவிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூட்டுறவு சங்கங்கள் மூலம், தமிழகத்தில் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு மானிய விலையில் நாப்கின்கள் விற்கப்பட்டு வருகின்றன.
மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம் என்றார். இதையடுத்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை விரைந்து அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
