×

திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் புதிதாக 30 சிப்காட் தொழில் வளாகங்கள்: 816 புதிய தொழிற்சாலைகளுக்கு 7558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு பல முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் திறப்பு

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 30 சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு 2030ல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்பது திண்ணம், திண்ணம். தமிழ்நாட்டின் தொழில் வரலாற்றில் ஒரே இடத்தில் பல தொழில்கள் தோன்றுவதற்கு வகை செய்யும் சிப்காட் நிறுவனத்தை 1971ல் உருவாக்கி 1973ல் ராணிப்பேட்டையில் முதல் சிப்காட் தொழில் வளாகத்தை தொடங்கி தொடர்ந்து பல சிப்காட் வளாகங்களை உருவாக்கியர் கலைஞர்.

அதன்பின்னர், ஏறத்தாழ 50 ஆண்டுகளில் 2021 வரை 54 சிப்காட் தொழில் வளாகங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டன. இந்த சிப்காட் தொழில் வளாகங்கள் வாயிலாக புதிய புதிய தொழிற்சாலைகள் தோன்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் ஒரு முன்னணி மாநிலமாக வளர்ந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டை 2030 க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்திட இலக்கை நிர்ணயித்தார்.

தமிழ்நாட்டின் தொழில்வளத்தைப் பெருக்கிட வேண்டும் என்பதில் குன்றா ஆர்வம் கொண்டு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய வெளிநாடுகளிலும் அரசு முறைப் பயணங்கள் மேற்கொண்டு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளையும் எடுத்துக்கூறி தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வரின் இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட பல முதலீட்டாளர்கள் முன்வந்தனர். அந்த முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்கிட ஐந்தாண்டுகளில் 30 புதிய தொழில் பூங்காக்களை தொடங்கினார்கள்.  அவை; 2021 முதல் ஆட்சியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்திடும் சிப்காட் தொழில் பூங்கா, தேனி மாவட்டம் தேனியில் உணவுப் பூங்கா 2022 இரண்டாம் ஆட்சியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இயந்திரவியல் தொழில் பூங்கா.

திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் இஎம்சி சிப்காட் தொழிற்பூங்கா. தூத்துக்குடி மாவட்டத்தில் அறைகலன்கள் பூங்கா. பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் தொழிற்பூங்கா. 2023 மூன்றாம் ஆட்சி ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சிப்காட் வாகனத் தொழிற்பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தில் சிப்காட் தொழில் பூங்கா, நெமிலியில் சிப்காட் தொழில் பூங்கா, கோவை மாவட்டம் கூளநாயக்கன்பட்டியில் சிப்காட் தொழில் பூங்கா, வேலூர் மாவட்டம் தாரப்படவேடு கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா, தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு சிப்காட் தொழில் பூங்கா.

2024 4ம் ஆட்சி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் சில்ல நத்தம் சிப்காட் தொழில் பூங்கா. கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏ.சாத்தனூர் செஸ் சிப்காட் தொழில் பூங்கா. பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் சிப்காட் தொழில் பூங்கா. திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் கிராமத்தில் சிப்காட் பூங்கா, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் பூங்கா. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காலணி பூங்கா. கோவை மாவட்டம் வாரப்பட்டியில் சிப்காட் பூங்கா. தர்மபுரி மாவட்டம் அதகப்பாடி சிப்காட் பூங்கா. விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் பூங்கா.

திருச்சி மாவட்டம் இலந்தைப்பட்டியில் சிப்காட் பூங்கா. சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் சிப்காட் பூங்கா. 2025 5ம் ஆட்சி ஆண்டில் சேலம் மாவட்டத்தில் சேலம் ஜவுளி பூங்கா. தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லிக்குளம் சிப்காட் பூங்கா. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் சிப்காட் பூங்கா; சிவகங்கை மாவட்டம் கழனிவாசலில் சிப்காட் பூங்கா, மதுரை மாவட்டம் வஞ்சி நகரத்தில் சிப்காட் பூங்கா.

திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் சிப்காட் பூங்கா. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் கிராமத்தில் சிப்காட் பூங்காஎன திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் மொத்தம் 30 சிப்காட் தொழில் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* 2021 க்கு பின் ஏற்படுத்தப்பட்ட சிப்காட் தொழில் வளாகங்களில் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள்- முதலீடுகள்- வேலைவாய்ப்புகள்
1973 முதல் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் பூங்காக்களில் நடைபெறும் தொழில்களை விரிவுபடுத்திடவும், புதிய தொழில் பூங்காக்களில் புத்தம் புதிய தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்கிடவும் இதுவரை 5 ஆண்டுகளில் 816 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 816 தொழில் நிறுவனங்களுக்கும் மொத்தம் 7588.798 ஏக்கர் நிலங்களை சிப்காட் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த 816 தொழிற்சாலைகளில் தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்வாகனத் தொழிற்சாலை, ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார் தொழிற்சாலை, ஜெயங்கொண்டத்தில் காலணி தொழிற்சாலை, கிருஷ்ணகிரியில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை முதலான பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பல தொழிற்சாலைகள் தொடர்ந்து திறக்கப்பட உள்ளன. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் பெற்று வருகின்றனர்.

இவற்றின் காரணமாக தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாகச் சிறந்து விளங்குகிறது.  “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என அய்யன் திருவள்ளுவர் கூறியதற்கு ஏற்ப, முதல்வர் மு.க.ஸ்டாலின் தாம் எண்ணியபடி, தமிழ்நாடு 2030ல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவார் என்பது திண்ணம், திண்ணம்.

Tags : Chennai ,Tamil Nadu government ,Tamil ,Nadu ,US ,
× RELATED ரம்ஜான் பண்டிகையையொட்டி...