நெல்லிக்குப்பம், மார்ச் 3: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகே பெத்தாங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் மனைவி செல்வராணி(50). இவர் சி. என். பாளையம் வைத்திலிங்கம் என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் மண் சலிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செல்வராணியின் மகன் ரஞ்சித், நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
