×

திராவிட மாடல் அரசின் சாதனையை விளக்க நாடு முழுவதும் இருசக்கர வாகன பிரசார பயணம்: திமுக தொண்டர் தொடங்கினார்

திருத்தணி, மார்ச் 2: திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சியை அனைத்து தரப்பு மக்களுக்கும் விளக்கும் நோக்கில் திமுக தொண்டர் நாடு முழுவதும், இருசக்கர வாகன பிரசார பயணத்தை நேற்று தொடங்கினார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி, திமுக தொண்டர். இவர் திமுக மாநாடுகள், பொதுக் கூட்டங்களுக்கு சைக்கிளில் சென்று பங்கேற்பது வழக்கமாக வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நதிகள் இணைப்பு அவசியம் குறித்து நாடு முழுவதும் சைக்கிள் பிரசார பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சி, திட்டங்களின் சிறப்புகள் விளக்கும் வகையில், பிரசார பயணத்தை நேற்று தொடங்கினார். தமிழ்நாட்டில் வடக்கு எல்லையில் தமிழ்நாடு-ஆந்திர எல்லைப் பகுதியான பலிஜகண்டிகையில் இருந்து தனது இருசக்கர பிரசார பயணத்தை தொடங்கினார்.

பயணத்திற்காக இருசக்கர வாகனத்தில் குடை பொருட்கள் வைக்க பெட்டி அமைத்து திமுக கொடி, உதயசூரியன் சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கினார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எடுத்து கூறி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசார பயணம் குறித்து சஞ்சீவி கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக திமுகவில் அனைத்து மாநாடுகள், கூட்டங்களில் சைக்கிளில் சென்று பங்கேற்றேன். அதன் தொடர்ச்சியாக தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி சாதாரண மக்களை சந்தித்து பிரசாரம் செய்தேன். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திராவிட மாடல் அரசின் சிறப்புகள் நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டு தொடங்கி உள்ளேன். முதலில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்து பின்னர் நாடு முழுவதும் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : DMK ,Dravidian model government ,Tiruttani ,Tamil Nadu ,Ammaiyarkuppam ,Tiruttani, Tiruvallur district… ,
× RELATED பங்குனி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளில்...