×

சென்னை ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்

 

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 28.2.2026 அன்று சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ராமா தெரு சென்னை நடுநிலைப்பள்ளியில் 3.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தினைப் திறந்து வைத்து, கரும்பலகையில் அமைப்பட்டுள்ள மின்னணு தொடுதிரையை இயக்கி பார்வையிட்டார். பள்ளியில் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கல்வி பயில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதையும். கண்கவர் வண்ணங்கள் சுவர்களில் தீட்டப்பட்டுள்ளதையும், குழந்தைகளை கவரும் வகையில் மேஜை, டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113, நூர்வீராசாமி தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார மையத்தினையும், வார்டு-112 பகுதியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையையும் திறந்து வைத்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மேலும் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமைந்தகரை சென்னை நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தினைப் திறந்து வைத்தார். பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அண்ணா சாலையில் 3.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சமூக நீதி பூங்காவினைப் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், டாக்டர் நா. எழிலன், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவர்கள் எஸ். மதன்மோகன், கூ.பி.ஜெயின், துணை ஆணையாளர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., (பணிகள்). எச். ஆர். கௌஷிக், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்). மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.மல்லிகா யுவராஜ், திருமதி பிரேமா சுரேஷ், திருமதி எலிசபெத் அகஸ்டின், திருமதி வசந்தி பரமசிவம், திருமதி மெடிட்டா கோவிந்தராஜ், திருமதி ராணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Deputy Chief Minister ,Sennai Thousand Lamakha ,Anna Nagar Assembly Constituencies ,Chennai ,Tamil Nadu ,Adyanidhi Stalin ,Chennai Thousand Lamakha ,Anna ,Nagar Assembly Constituencies ,Udayanidhi Stalin ,
× RELATED வெங்காய லோடு பிடித்த பறக்கும் படை;...