×

தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,256 முகாம்களில் 18,52,561 பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் இதுவரை 1,256 முகாம்கள் நடைபெற்று, 18,52,561 பேர் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககத்தில், முதல்வரால் 2.8.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ – 1,256 முகாம்கள் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2,58,80,625 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். இந்த மகத்தான திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஐ.நா விருதும் வழங்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 எனும் திட்டத்தின் மூலம் இன்று வரை 5,22,908 பேருடைய உயிர்களை காப்பாற்றி இருக்கிறது. இதற்காக அரசு செலவிட்ட தொகை ரூ.505.54 கோடி. ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை’ பொறுத்தவரை பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் உள்பட 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் மூலம் இதுவரை 1256 முகாம்களில் பயன்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 18,52,561. தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,256 முகாம்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை புதிதாக பெற்றவர்களின் எண்ணிக்கை 50,190 பேர். மேலும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் 60,682 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறை சார்பில் பயன்பெற்ற பயனாளிகள் எண்ணிக்கை 3,55,584, அமைப்பு சாரா தொழிலாளர்கள் 2,78,739, தூய்மை பணியாளர்கள் 96,352 பேரும் பயன்பெற்றிருக்கிறார்கள். புற்றுநோய் பாதிப்புகள் உள்ளானவர்கள் 222 பேர், கண்புரை நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் 8,401 பேர், காசநோய் பாதிப்புகள் 595 பேர், இதய நோய் பாதிப்பு 1,626 பேர், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு 3,877 பேர், புதிதாக சர்க்கரை நோய் பாதிப்பு 1,50,708 பேர், உயர் ரத்த அழுத்தம் 4,28,454 பேர், சிறுநீரக மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் 46,409 பேர், ரத்த சோகை கண்டறியப்பட்டவர்கள் 66,251 பேர் கண்டறியப்பட்டு மொத்தம் 7,06,543 பேர் மேல் சிகிச்சைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,Minister of Health and Public Welfare ,Health… ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...