சென்னை: கல்வி நிதியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.545 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டுக்கு அரசு சார்பில் கல்வி நிதியும், ஊக்க நிதியும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகமான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு கல்வி நிதியாக ரூ.525 கோடி, செயல்திறன் ஊக்க நிதியாக ரூ.20 கோடி என மொத்தம் ரூ.545 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை 4 தவணைகளில் வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உதவி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம், பல்கலைக்கழக நிர்வாகத்தில் இ-ஆபீஸ் நடைமுறைப்படுத்துவது, 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக்கட்டணத்தை திருத்தியமைப்பது உட்பட 11 விதமான நிபந்தனைகளும் இந்த கல்வி நிதி வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை தமிழக அரசின் உயர் கல்வித்துறைச் செயலாளர் சங்கர் வெளியிட்டுள்ளார்.
