×

நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

சென்னை: நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: தோழர் இரா. நல்லகண்ணுக்கு 2025 ஆகஸ்ட் 24ம் தேதி புரையேற்றப் பாதிப்பு ஏற்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின்நல்லகண்ணுக்கு மிகச் சிறந்த முறையில் உயர்ந்தபட்ச சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதோடு, நேரடியாக கண்காணித்தும் வந்தார். அவ்வப்போது மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்த்து மருத்துவர் குழுவுடன் இடைவிடாத தொடர்பில் இருந்து வந்தார்.

அதேபோல் கண்காணித்து வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (டீன்) , தீவிர கண்காணிப்பு மருத்துவப் பிரிவு பொறுப்பாளர், இவர்களுடன் இணைந்து பணிபுரிந்த மருத்துவர்கள் குழு மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பரிசோதனை தொழில்நுட்பப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாவல் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இரா. நல்லகண்ணுக்கு தமிழ்நாடு அரசு முழு மரியாதை செலுத்த உத்தரவிட்ட முதல்வருக்கும், அவருடன் நேரில் வந்து மலர் அஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்களுக்கும், கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்ததோடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைத்து நேரில் அஞ்சலி செலுத்தியதற்கும், தொடர்ந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இதயபூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

Tags : Nallakanu ,Communist Party ,Chennai ,Communist Party of India ,Nallakannu ,Comrade ,Er. Nallakhan ,Rajiv Gandhi Hospital ,
× RELATED தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு...