×

செய்யாறு அருகே ஊராட்சி தலைவியை தாக்கிய 3 பேர் கைது மேலும் 4 பேருக்கு வலை

செய்யாறு, பிப்.9: செய்யாறு அருகே ஊராட்சி மன்ற தலைவியை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா நமண்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவரது மனைவி குணபூசனம்(37), ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அமுல்ராஜ்(35) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளதாம். இதனால் கடந்த மாதம் 30ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குணபூசனம் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அமுல்ராஜ், அவரது சகோதரர் பாண்டியராஜ்(31), உறவினர்கள் செல்வ விநாயகம்(32), அருள், சுதாகர், ஓம்பிரகாஷ், முனியம் ஆகியோர் குணபூசனத்திடம் தகராறு செய்துள்ளனர்.

மேலும் ஆத்திரமடைந்த அமுல்ராஜ் தரப்பினர் கையாலும், கட்டையாலும் குணபூசனத்தை சரமாரி தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற குணபூசனத்தின் கணவர் விஜயகுமார், சகோதரர் பழனி ஆகியோரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து குணபூசனம் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுல்ராஜ், பாண்டியராஜ், செல்வவிநாயகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருள் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : panchayat leader ,Seiyaru ,
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...